Christian Historical Society

வேதமும், ஜெப புத்தகமும் -The Bible and Prayer Book: From Canterbury to Tinnevelly

Sujith S
Sujith S

christianhistorical@gmail.com

Tradition

(கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் மாத ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை ஜனவரி 2025)

 

இங்கிலாந்தின் அமைதியான தேவாலயங்களில் எதிரொலித்த ஜெபங்கள், பல சதாப்தங்களை கடந்து பயணித்து, தமிழ் மண்ணின் திருநெல்வேலி (Tinnevelly) மாவட்டத்தின் கிராமங்களில் விசுவாசத்தை மெருகூட்டும் ஜெபங்களாக ஒலிக்கத் தொடங்கியதை குறித்த இந்த கதை வெறும் வரலாற்று நிகழ்வு அல்ல, இது ஒரு தனித்துவமான ஆவிக்குரிய பயணத்தின் அற்புதமான கதை.

 

16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆரம்பித்த சீர்திருத்தம், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருநெல்வேலி திருமண்டலத்தின் (Tinnevelly Diocese) விசுவாசிகளின் (believers) வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரான்மரின் ஜெப புஸ்தகம் (Book of Common Prayer), அவர் தன் உயிரை இழந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, திருநெல்வேலியின் கிராமப்புற தேவாலயங்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலித்தது.

இவ்வாறு, 16ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய ஒரு ஆவிக்குரிய பயணம், காலத்தையும் தூரத்தையும் கடந்து, தமிழக கிறிஸ்தவர்களின் வாழ்வில் புதிய அர்த்தத்தை பெற்றது. இன்றும் திருநெல்வேலி திருமண்டலத்தின் தேவாலயங்களில் கிரான்மரின் ஜெப புஸ்தகத்தின் தொனி புதிய தலைமுறையினரின் இதயங்களை தொடர்ந்து தொட்டு கொண்டு இருக்கின்றன.

 

வரலாற்றில் ஆன்மாவையே உணரக்கூடிய உண்மையாக மாற்றியவை சில புத்தகங்கள் மட்டுமே. இந்த கதையில் நான் சொல்லப்போகும் இந்த இரண்டு புத்தகங்களும் அவற்றில் முக்கியமானவை. வில்லியம் டிண்டேலின் வேதாகமம் (Bible) மற்றும் தாமஸ் கிரான்மரின் ஜெப புஸ்தகம் (Book of Common Prayer). இன்று இந்த புத்தகத்தின் பெயர்கள் சர்ச்சைக்குரிய பெயர்களாக தோன்றவில்லை. ஆனால் 16ஆம் நூற்றாண்டில், அவற்றின் வார்த்தைகளும் சொற்றொடர்களும் கலகத்தை தூண்டின, பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன, மற்றும் இறுதியில் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து திருச்சபையின் மரபு வாழ்க்கை முறையின் பின்னணியாக மாறின.

 

சாதாரண மக்கள் வாழவும், மடியவும், அன்பு செலுத்தவும் அவர்களை தூண்டிய புத்தகங்கள் இவை. மேலும் தன்னுடன் போரிட்டுக் கொண்டிருந்த டியூடர் வம்சத்தின் பின்னணியில் நடந்த இந்த கதை சதி, மாறும் விதி, மற்றும் தங்கள் சொந்த அழிவை எதிர்கொண்டாலும் தங்கள் வாழ்க்கையில் இருந்த தேவனின் தரிசனத்தை பின்தொடர்ந்த இரண்டு மனிதர்களின் கதை ஆகும்.

 

டிண்டேலின் வேதாகமம் மிகவும் புரட்சிகரமான, சீர்திருத்தத்தை எதிர்த்தவர்களுக்கு ஆபத்தான புத்தகமாக இருந்தது. இந்த படைப்புகள் இங்கிலாந்து கண்ட மிக தீவிரமான புரட்சியை வரையறுத்தன. இவை வெறும் ஆத்தும மீட்புக்கான இலக்கிய படைப்புகள் அல்ல. இவை மக்களை சிந்திக்க வைக்க கூடிய பிரச்சார இலக்கியங்கள், கவிதைகள், மற்றும் அவர்களின் நம்பிக்கையின் அறிக்கைகள் ஆகும்.

 

கத்தோலிக்க எதிர்ப்பை உருவாக்கிய இந்த இரண்டு மனிதர்கள், ஆரம்ப காலகட்டத்தில் எதிர்காலத்தில் இருக்கபோகும் தங்களின் சொந்த வாழ்க்கைக்கு முரண்பாடாக, ரோமாபுரியில் இருந்தே (Rome) தங்கள் வாழ்க்கையை மிகுந்த பக்தியுடன் தொடங்கினர். வில்லியம் டிண்டேல், தாமஸ் கிரான்மர் ஆகியோர் ஒருவருக்கொருவர் இரண்டு தனித்தனி காலத்தில் கத்தோலிக்க திருச்சபையால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட உலகில் பிறந்தனர். 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ள அனைவரைப் போலவே, அவர்களின் வாழ்க்கையின் ஒரே நோக்கம் அவர்களின் நித்திய இரட்சிப்பு (Eternal Salvation) ஆகும்.

 

இந்த நோக்கத்திற்காக, அவர்கள் பாவ அறிக்கை செய்தனர், தவம் செய்தனர், மற்றும் மிக முக்கியமாக திருப்பலியில் (Mass) கலந்து கொண்டனர். அன்றும் இன்றும் கத்தோலிக்கர்களுக்கு மிகவும் புனிதமான ஆராதனை இதுவாகும். இதில் ஒரு அற்புதம் நடப்பதாக நம்பப்பட்டது, அந்த அற்புதம் உங்கள் ஆத்துமாவை காப்பாற்றும் சக்தி கொண்டது என்று கருதப்பட்டது.

 

குருவானவர் புனித லத்தீன் வார்த்தைகளை உச்சரிக்கும் போது, இயேசுவின் சிலுவை மரண தியாகம் பரலோகத்தில் மீண்டும் நடப்பதாக நம்பப்பட்டது. அப்பம் அவரது உண்மையான சரீரமாகவும், திராட்சை ரசம் அவரது உண்மையான இரத்தமாகவும் உருமாறியதாக கருதப்பட்டது. இது 'டிரான்சப்ஸ்டான்சியேஷன்' (Transubstantiation) என்று அழைக்கப்பட்டது.

 

லத்தீன் மொழியிலான திருப்பலி மிகவும் புனிதமான ஆராதனையாக கருதப்பட்டது. இது தேவ பிரசன்னம் சாதாரண உலகத்தில் நுழைய அனுமதிக்கும் ஒரு வழியாக இருந்தது. அப்பமும் திராட்சை ரசமும் உண்மையான இயேசு கிறிஸ்துவின் ரத்தம் மற்றும் சதையாக உருமாற்றப்பட்ட பிறகு, இந்த அப்ப துண்டை பார்ப்பதே குணமளிக்கும், பாதுகாக்கும், ஆசீர்வதிக்கும் என்று நம்பப்பட்டது. சாதாரண மக்களும் தெய்வீகத்தை காணும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியதால், இது தெருக்களிலும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

 

இந்த உலகில் புனிதமும் உலகியலும் ஒன்றாக இருந்தன. அதிகாரத்தின் பொது மொழி லத்தீன் ஆகும். வேதாகமத்தையும் திருச்சபையின் சடங்குகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சிப்பதே மரண தண்டனைக்குரிய விசுவாசத்துரோக குற்றமாக கருதப்பட்டது.

 

இந்த லத்தீன் மொழியின் தடுப்பு சுவரை டிண்டேல், கிரான்மர் ஆகியோரின் எழுத்துக்கள் தகர்த்தெறிந்தன. அவர்களின் வார்த்தைகளிலிருந்தும் சொற்றொடர்களிலிருந்தும் ஆங்கிலிகன் திருச்சபை (Church of England) உருவாக்கப்பட்டது, இங்கிலாந்து திருச்சபையின் சீர்திருத்த நம்பிக்கைகள் முதன்முதலில் வெளிப்படுத்தப்பட்டன.

 

பிரிட்டனின் இந்த விசுவாச போராட்டம் ஒரு புத்தகத்துடன் தொடங்கியது. அந்த புத்தகம் அதன் படைப்பாளரின் உயிரையே பறித்தது. வில்லியம் டிண்டேல் 12 வயதில் ஆக்ஸ்போர்டுக்கு வந்தார். அவர் மாலின் பள்ளியில் படித்து, பின்னர் மாலின் ஹாலில் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார்.

 

கிளோஸ்டர்ஷயரில் (Gloucestershire) துணி வியாபாரிகளின் மகனாக வளர்ந்த அவர், விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் தனது குழந்தைப் பருவத்தை கழித்தார். சந்தையின் தினசரி உரையாடல்களின் ஆங்கில ஒலிகள் அவர் காதுகளில் ஒலித்தன. ஆனால் இங்கே, மத்திய கால உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகத்தில், வகுப்பறையின் மொழி லத்தீன் ஆக இருந்தது.

 

ஆக்ஸ்போர்ட் பாரம்பரிய கத்தோலிக்க கல்வியின் கோட்டையாக இருந்தது. ஆக்ஸ்போர்டில் வேதாகமம் லத்தின் மொழியில் இருந்ததால் அது படிக்கப்பட்ட வறண்ட மற்றும் உயிரற்ற முறையை டிண்டேல் வெறுத்தார். அதன் உரையும் லத்தீன் மொழியில் இருந்தது, மேலும் முழு படைப்பையும் புரிந்து கொள்வதற்கு பதிலாக தனிப்பட்ட வசனங்களின் பகுப்பாய்வு மீது கவனம் செலுத்தப்பட்டது.

 

ஆனால் இங்கு படிக்கும் காலத்தில், ஒரு புரட்சிகர புதிய அணுகுமுறை பற்றிய வதந்திகளை அவர் கேள்விப்பட்டார். ஆங்கில அதிகார வழித்தடங்களில் ஒரு தெளிவற்ற, சர்ச்சைக்குரிய ஜெர்மானிய துறவியைப் பற்றிய கதைகள் முணுமுணுக்கப்பட்டன. அவரது பெயர் லூதர் (Luther). 1517ல் அவர் போப்பாண்டவரின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீது கருத்து தாக்குதல் தொடுத்தார். அந்த தாக்குதல் வேதாகமத்தின் மீதான அவரது ஆய்வில் அஸ்திபாரம் கொண்டிருந்தது.

 

லூதரின் செய்தி நேரடியானது, எளிமையானது, அவர் மனிதர்களின் நித்திய வாழ்க்கை அபாயத்தில் இருப்பதாக நம்பினார் . கத்தோலிக்க திருச்சபையில், இரட்சிப்பு அதன் சடங்குகளில் காணப்பட்டது. இந்த சடங்குகள் நூற்றாண்டுகளாக போப்புகள் மற்றும் பேராயர்களால் (Bishops) கவனமாக வடிவமைக்கப்பட்டவை. ஆனால் லூதர் இதற்கு மாறுபட்டார்.

 

லூதர், தேவாலயம் செல்வதன் மூலமோ அல்லது பாவத்திற்காக தவம் செய்வதன் மூலமோ இரட்சிப்பு கிடைக்கும் என்று வேதாகமம் எதுவும் சொல்லவில்லை என்று கூறினார். இரட்சிப்பு விசுவாசத்தால் (Faith) மட்டுமே வரும் என்றார். எனவே கத்தோலிக்க படிநிலை அமைப்பும் அதன் நடைமுறைகளும் அதாவது யாத்திரை, தவம், பாவ அறிக்கை போன்றவை அனைத்தும் தேவையற்றவை என்றார். இதை நிரூபிக்க, அவர் வேதாகமத்தை லத்தீனிலிருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார், இதனால் சாதாரண மக்கள் தாங்களாகவே முடிவெடுக்க முடியும் என்று நிரூபித்தார்.

 

கத்தோலிக்க படிநிலை அமைப்புக்கு இது ஒரு நெருக்கடியாக இருந்தது, இதை எந்த விலை கொடுத்தும் அழிக்க வேண்டும் என்று போப்பும் அவரை சார்ந்தவர்களும் கருதினர். ஏனென்றால் இது அவர்களின் பயம் குழப்பம், ஒழுக்க சீர்குலைவு ஆகியவற்றை பற்றியதாக இருந்தது. லூதரின் இந்த கோட்பாடுகள் ஐரோப்பாவை புரட்சியில் தள்ளின.

 

ஆனால் டிண்டேலுக்கு இந்த யோசனைகள் அவரது வாழ்க்கையின் மீதி காலத்தை இயக்கும் தூண்டுதலாக மாறின. வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற அவரது உறுதியான தீர்மானத்திற்கு அடித்தளமிட்டது. கிளோஸ்டர்ஷயரில் பிற கிறிஸ்தவ குருமார்களுடன் நடந்த கடுமையான வாக்குவாதத்தில், டிண்டேல் தனது புரட்சிகர லட்சியத்தை தெளிவுபடுத்தினார். "நான் போப்பையும் அவரது சட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கிறேன்" என்று அவர் கூறினார். மேலும் "தேவன் என்னை பயன்படுத்தினால், ஏர் உழும் சிறுவனுக்கு உன்னைவிட வேதாகமத்தைப் பற்றி அதிகம் தெரியும்படி செய்வேன்" என்று மிகப்பெரும் கிறிஸ்தவ குருமார்களுக்கு முன்பாக முழக்கமிட்டார்.

 

டிண்டேலின் வார்த்தைகள் பயங்கரமான் வதந்திகளை கிளப்பின, இதனால் அவர் லண்டனுக்கு தப்பி ஓட வேண்டியிருந்தது. 16ஆம் நூற்றாண்டில் அவர் வாழந்த இடங்கள் போப்பை எதிர்ப்பவர்களின் வேட்டையாளர்கள் நிறைந்த நகரமாக இருந்தது. அவர்கள் லூதரின் ஆதரவாளர்களை ஒழிக்க ஆர்வமாக இருந்தனர். பிடிபட்டவர்கள் விசாரணை செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர்.

 

ராஜா ஹென்றி VIII (Henry VIII) ஒரு அதித்தீவிரமாக ரோமன் கத்தோலிக்கத்தை பின்பற்றுபவராக இருந்தார். டிண்டேல் லண்டனுக்கு வந்தபோது, ஹென்றி ஏற்கனவே இருபது ஆண்டுகளாக சிம்மாசனத்தில் இருந்தார். ராஜா லூதருக்கு கடுமையாக எதிராக இருந்தார், அவரது கருத்துக்களுக்கு எதிராக ஒரு கடுமையான நிருபத்தை எழுதியிருந்தார். இது போப்பின் ஆதரவை பெற்றது, அவருக்கு "விசுவாசத்தின் பாதுகாவலர்" (Defender of Faith) என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

இத்தகைய எதிர்மறையான சூழலில்தான் டிண்டேல் தனது வேதாகம மொழிபெயர்ப்புக்கு ஒரு ஆதரவாளரை தேடினார். அவர் லண்டன் பேராயர் (Bishop) டன்ஸ்டாலை சந்தித்து அவரது ஆதரவை பெற முயன்றார். ஆனால் டன்ஸ்டால் ராஜாவைப் போலவே லூதரை வெறுத்தார், டிண்டேலின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

 

இது சாவை நோக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 1524ல் டிண்டேல் இங்கிலாந்தை விட்டு வெளியேறினார். வேதாகமத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் அவருக்கு சக்திவாய்ந்த எதிரிகளை தேடித்தந்தது. ஹென்றி VIII, புனித ரோம சாம்ராஜ்யத்தின் உளவாளிகள், மற்றும் போப் கூட இதில் அடங்குவர். இவர்கள் அவரை தடுக்க தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய உறுதிபூண்டனர்.

 

இங்கிலாந்தை விட்டு சென்ற டிண்டேலின் அடுத்த இலக்கு ஜெர்மனி, லூதரின் வீடு. அவரது பணிக்கு ஒரு இடம் கிடைக்கும் என நம்பிய இடம். இனி அவரது வாழ்நாள் முழுவதும் அவர் ஒரு குறிவைக்கப்பட்ட மனிதராக இருப்பார் என்று நினைத்தார். நினைத்தவாறே டிண்டேல் அடுத்த 10 ஆண்டுகள் தப்பி ஓடிக்கொண்டே இருந்தார். தினமும் 12 முதல் 15 மணி நேரம் தனது ஆபத்தான மொழிபெயர்ப்பை முடிக்க உழைத்தார். ரோமன் கத்தோலிக்க அதிகாரத்தில் இருந்த இடங்களில் இது மிகவும் ஆபத்தான பணியாக இருந்தது.

 

அவர் பயணம் செய்யும்போது, லூதரின் வேதாகம மொழிபெயர்ப்பை படிக்க ஜெர்மன் மொழியை கற்றுக்கொண்டார். மாபெரும் மானுடவியல் அறிஞர் எராஸ்மஸின் கிரேக்க புதிய ஏற்பாட்டையும் ஆழமாக படித்தார், அந்த மொழியில்தான் வேதாகமம் முதன் முதலில் எழுதப்பட்டது. இரண்டு ஆண்டுகள் அவர் முற்றிலும் இந்த கிரேக்க புதிய ஏற்ப்பாட்டில் மூழ்கியிருந்தார். இதன் விளைவுவாக அடுத்த 500 ஆண்டுகளுக்கும் நிலைத்து நின்ற, தனித்துவமான, ஒரு ஏர் உழும் சிறுவனை கூட ஈர்க்கும் புதிய ஏற்பாட்டின் பிரகாசமான மொழிபெயர்ப்பாக அமைந்தது.

 

1526ல் டிண்டேலின் புதிய ஏற்பாட்டின் ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்பட்டன. ஆனால் இன்று ஒரே ஒரு முழுமையான பிரதி மட்டுமே உள்ளது. அவரது வார்த்தைகளும் சொற்றொடர்களும் இன்றும் நூற்றாண்டுகளை கடந்து எதிரொலிக்கின்றன.

 

ஆனால் இது அவரது உரைநடையின் அழகால் அல்ல. டிண்டேலின் எதிரிகளை வெகுவாக எரிச்சலூட்டியது, அவர் மிக கவனமாக தேர்ந்தெடுத்த சில குறிப்பிட்ட சொற்கள் ரோமன் கத்தோலிக்க அதிகாரத்தின் மீது நேரடி தாக்குதல்களாக இருந்தன. உதாரணமாக, இயேசு "இந்த கல்லின்மேல் என் சபையை கட்டுவேன்" என்று கூறியபோது, அது கல்லாலும், மண்ணாலும் கட்டிய ஆலயத்தை சுட்டினால் பாரம்பரிய பார்வை. ஆனால் டிண்டேல் கிரேக்க வார்த்தையான எக்லேசியாவை (Ecclesia) "கான்கிரிகேஷன்" (congregation) என்று மொழிபெயர்த்தார். இது ஒரு ஆலயத்தை குறிக்கவில்லை, போப்பால் தலைமை தாங்கப்படும் ஒன்றை குறிக்கவில்லை, மாறாக மக்களின் கூட்டத்தை, ஒரு சமூகத்தை குறிக்கிறது.

 

இந்த ரோமன் கத்தோலிக்க படிநிலை அமைப்பின் மீதான நேரடி தாக்குதல், அனைத்து கிறிஸ்தவர்களும் தேவனுக்கு முன் சமமாக நிற்கிறார்கள் என்பதை குறித்தது. மேலும் இது விசுவாசிகளின் (believers) சரீரமே திருச்சபையை உருவாக்குகிறது என்றும், பேராயர்களோ (Bishops) படிநிலை அமைப்போ அல்ல, மக்களே திருச்சபை என்று விளக்கியது. இது முற்றிலும் புரட்சிகரமானதாக அமைந்தது.

 

மாற்கு நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசு "மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்" என்று பிரசங்கிக்கிறார். நமது கண்களுக்கு இது இயேசு விசுவாசிகளுக்கு கூறும் பொதுவான அறிவுரை போன்று தோன்றலாம். ஆனால் ரோமன் கத்தோலிக்கம் பாரம்பரியம் அதை "பாவ அறிக்கை செய்யுங்கள்" என்றும் பாதிரியார்களுக்கு முன் பாவ அறிக்கை செய்வதையும், தவம் செய்வதையும் குறித்தது. விசுவாசி மற்றும் தேவனுக்கு இடையே நடக்கும் உள்ளான விஷயமாக மனந்திரும்புதலை இது விளக்காமல் பாதிரியார்களின் சுயத்துகாக பரிபாலனம் செய்தது.

 

கத்தோலிக்க படிநிலை அமைப்பும், போப்பாண்டவரும் அவர்களின் முழு சித்தாந்தமும் ஒரு கட்டத்தில் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகியது என்பதால் அவர்கள் பயப்பட தொடங்கினார்கள். அவர்களுக்கு இது மிக கடுமையான அச்சுறுத்தலாக இருந்தது. திருச்சபை என்று எதுவும் இல்லை, சபை கூட்டமே திருச்சபை என்று மக்களிடம் சொல்லும்போதும், சாக்கிரமேந்து ரீதியான பாவ அறிக்கை என்று எதுவும் இல்லை, உங்கள் சொந்த இதயத்தில் வருந்துவது மட்டுமே என்று சொல்லும்போதும், டிண்டேல் மக்களை நரகத்திற்கு வழிநடத்துகிறீர்கள் என்று ரோம கத்தோலிக்கம் அவரை குற்றம் சாட்டியது. எனவே ரோமன் கத்தோலிக்க படிநிலை அமைப்பின் பார்வையில், தேவனுக்கு முன் ஆங்கில மக்களின் ஆத்துமாக்களுக்கு அவரகளே பொறுப்பானவர்களாக இருப்பதால், இதை எந்த வழியிலாவது தடுத்து நிறுத்துவது அவர்களின் கடமையாக எண்ணினார்கள்.

 

டிண்டேல் புதிய ஏற்பாட்டின் பிரதிகளை வெளியில் பரப்ப துவங்கினார், ஒருகட்டத்துக்கு பின் அவை இனி கட்டுப்படுத்த முடியாதவையாக மாறின. இந்த சிறிய புத்தகம் ஒரு முழு தேசத்தின் அடித்தளத்தையே தகர்க்கப் போனது. 1526ல் டிண்டேலின் புதிய ஏற்பாட்டின் பிரதிகள் கப்பல் சரக்குகளுக்கிடையே மறைத்து வைக்கப்பட்டு இங்கிலாந்துக்குள் கடத்தப்பட்டன. அவரது இரகசிய படைப்பு வெற்றிப் புத்தகமானது.

 

முதன்முறையாக புதிய ஏற்பாட்டின் வார்த்தைகள் அனைவரும் படிக்கும்படி விடுவிக்கப்பட்டன. சாதாரண மக்களிடையே இது பிரபலமாக இருந்தபோதிலும், டியூடர் ஆட்சிக்காரர்கள் இது சாத்தானிடமிருந்து வந்ததாக எண்ணினர். செயின்ட் பவுல் ஆலயத்தில் டிண்டேல் மற்றும் அவரது புதிய ஏற்பாட்டிற்கு எதிரான போராட்டம் மிக தீவிரமாக நடத்தப்பட்டது.

 

அவரது மொழிபெயர்ப்புகளுடன் பிடிபட்டவர்கள் அவமானகரமான தண்டனைக்கு உள்ளானார்கள். அவர்கள் நகரம் முழுவதும் புதிய ஏற்பாட்டின் பிரதிகளை தங்கள் கழுத்தில் தொங்கவிட்டபடி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் செயின்ட் பவுல் ஆலயத்தை அடைந்ததும், டிண்டேலின் படைப்புகளின் அனைத்து பிரதிகளும் தீயில் எரிக்கப்பட்டன.

 

இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் டிண்டேல் மனம் தளரவில்லை. ஆனால் அவரது காலம் முடிவுக்கு வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பெல்ஜியத்தில் அவர் இறுதியாக ரோம சாம்ராஜ்யத்தின் வீரர்களால் பிடிக்கப்பட்டார். ராஜா ஹென்றியின் சதியுடன் இது நடந்தது.

 

1536 அக்டோபர் 6ஆம் தேதி, டிண்டேல் விசுவாச துரோகத்திற்காக விசாரிக்கப்பட்டு மரண தண்டனைக்கு தீர்ப்பளிக்கப்பட்டார். அவரது கடைசி வார்த்தைகள் "கர்த்தரே, இங்கிலாந்து மன்னரின் கண்களைத் திறவும்" என்று ஆங்கிலத்தில் ஒரு வேதாகமத்தை அனுமதிக்குமாறு ஹென்றிக்கு ஒரு வேண்டுகோளாக இருந்தது .

 

டிண்டேல் தான் தோல்வியடைந்ததாக நினைத்து மரித்தார். ஆங்கிலத்தில் வேதாகமம், நாட்டின் ஒவ்வொரு மனிதரும் அணுகக்கூடியதாக இருப்பது என்ற அவரது கனவு இன்னும் தொலைவில் இருந்தது. ஆனால் அவர் எரிக்கப்படும்போதே, டிண்டேலின் பணிக்கு சக்திவாய்ந்த இரகசிய ஆதரவாளர்கள் இருந்தனர். ஆங்கில வேதாகமத்தின் முன்னோடி தனது கடைசி மூச்சை விடும்போது, அவரது மொழிப்பெயர்ப்பின் வேதாகம வார்த்தைகள் புதிய பரிமாணத்தை பெற ஆரமித்தது.

 

டிண்டேலின் இறப்புக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தாமஸ் கிரான்மர் தனது வாழ்வின் தனிமையிலிருந்து வெளியேற்றப்பட்டு அரச அரண்மனையில் பணி செய்ய தள்ளப்பட்டார். ஹென்றி VIII மற்றும் கேதரின் ஆஃப் அராகன், இவர்களின் விவாகரத்து பற்றிய வாதங்களை தொகுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் அறிஞர்களில் அவரும் ஒருவராக அமர்த்தபட்டார். இந்த பணி அவரை இங்கிலாந்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக மாற்றியது.

 

தனது வாழ்வின் முதல் 40 ஆண்டுகள் கிரான்மர் ஒரு பழமைவாத கத்தோலிக்கராக இருந்தார். ஆனால் ஹென்றியின் விவாகரத்து மீதான பணியை தொடங்கியபோது, அவரது கருத்துக்கள் மாறத் தொடங்கின. மன்னர் ஹென்றி விரும்பிய விவாகரத்தை பெறுவதற்கான வழியை கண்டுபிடிப்பது அவரது பணியாக இருந்தது. கிராமரின் பணிக்கு தடையாக இருந்தவர் போப்பே, ஏன் என்றால் போப்பாண்டவர் அந்த விவாகரத்தை அனுமதிக்க மறுத்தார்.

 

போப்பாண்டவரின் இந்த முடிவுக்கு தகுந்த வாதமாக, கிரான்மர் முன்னெடுத்த தீர்வு திருச்சபை மன்றங்களின் வரலாற்றை ஆராய்வது, பேராயர்கள் (Bishops) போப்பிற்கு வெளியே முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார்களா என்று பார்ப்பது. அதிலே முற்காலத்தில் இந்த சம்பவங்கள் போப்பாண்டவரின் அதிகாரத்திற்கு வெளியே நடந்திருந்தது என்று அவர் கண்டறிந்தார். இது அவரை ஒரு தீவிர முடிவுக்கு கொண்டு சென்றது. மனிதர்கள் வாழும் இந்த பூமியில் தேவனின் சித்தத்தை தீர்மானிக்க வேண்டியவர் வேதத்தை போதிக்கும் போப்பாண்டர் அல்ல, அது மக்களின் தலைவரான இருக்கும் அரசர் என்பதே.

 

எதிர்பாராத விதமாக, இந்த யோசனை ஹென்றிக்கு மிகவும் பிடித்திருந்தது. 1533ல் அவர் கிரான்மரை கான்டர்பரி பேராயராக (Archbishop of Canterbury) நியமித்து அவரை கௌரவித்தார். கிரான்மரின் புத்திசாலித்தனமான சிந்தனை ஹென்றியின் விவாகரத்தை மட்டுமல்லாமல், ஆங்கில திருச்சபையின் எதிர்காலத்தையும் வடிவமைத்தது. இது போப்பிற்கு விசுவாசமாக இருந்த ஆங்கில திருச்சபையிலிருந்து, தேசிய திருச்சபைக்கான அடிப்படை மாற்றத்தின் தொடக்கத்தை வடிவமைத்தது.

 

கிரான்மரின் பதவி உயர்வு மூலம் டிண்டேலின் வாழ்நாள் லட்சியம் நிறைவேறியது அது தான் ஆங்கிலத்தில் வேதாகமம். 1534ல் கிரான்மர் பத்து பேராயர்களை (Bishops) புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க பணியமர்த்தினார். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். அவர்களின் மொழிபெயர்ப்புகள் போதுமானதாக இல்லை அல்லது முடிக்கப்படவில்லை.

 

கிரான்மர் ஏமாற்றமடைந்தார். அந்த பேராயர்களின் வேதாகமம் உலக முடிவிற்கு அடுத்த நாள் வரை முடிக்கப்படாது என்று அவர் கூறினார். அவரும் ஹென்றியின் நம்பிக்கைக்குரிய மனிதரான க்ரோம்வெல்லும் ஹென்றிக்கு பிடிக்காத ஒன்றை செய்ய வேண்டியிருந்தது. அதுதான் அவர்கள் இரகசியமாக டிண்டேலின் மொழிபெயர்ப்புகளை உபயோகப்படுத்தியது.

 

அவர்கள் அதற்கு இறுதி வடிவம் கொடுத்தனர். அது பெரிய வேதாகமம் (Great Bible) என அழைக்கப்பட்டது, ராஜாவால் அங்கீகரிக்கப்பட்டது, கிரான்மரின் முன்னுரையுடன் அது வெளியிடப்பட்டது. ஆனால் அது டிண்டேலின் மொழிபெயர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது, டிண்டேலின் மிகவும் புரட்சிகரமான மொழி அமைப்புகள் சில மட்டுமே மாற்றப்பட்டன.

 

1538ல், டிண்டேலின் மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த பெரிய வேதாகமம் ஒவ்வொரு தேவாலயத்திலும் வைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. .

 

ஆனால் ஆங்கிலத்தில் வேதாகமம் மட்டும் சீர்திருத்தத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல போதுமானதாக இருக்கவில்லை. போப்பை வெறுத்த போதிலும், ராஜாவும் அவரது மக்களும் இன்னும் தங்கள் கத்தோலிக்க சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளுடன் ஆழமாக இணைந்திருந்தனர். டிண்டேலின் பக்கங்களில் விதைக்கப்பட்ட விசுவாசங்கள் மற்றும் சுவிஷேச கருத்துக்கள் தினசரி வாழ்க்கையின் யதார்த்தமாக மாற்ற இரண்டாவது படைப்பு தேவைப்பட்டது.

 

இப்போது இங்கிலாந்தின் அரசராக இருந்த ஹென்றி தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரோமன் கத்தோலிக்க சுவடுகளை மறைக்க தொடங்கினார். 1534ல் இன்னும் போப்பிற்கு விசுவாசமாக இருந்த பெரிய கத்தோலிக்க மடாலயங்கள் கலைக்கப்படத் தொடங்கின. 1538 டிசம்பர் 3ஆம் தேதி, ரீவோ என்ற 12ஆம் நூற்றாண்டு சிஸ்டர்சியன் மடாலயத்தின் கதவுகள் மூடியது.

 

இந்த மடாலயத்தின் அழிவுகள் ஆழமான பின்விளைவை ஏற்படுத்தியது. இந்த பின்விளைவு இங்கிலாந்தின் திருச்சபையின் உயிர்வாழ்வுக்கு புதிய ஆங்கில ஆராதனை நூல் அவசியம் என்ற கிரான்மரின் முடிவிற்கு பின்னணியாக அமைந்தது. மடாலயத்தின் கட்டிடங்களில் இருந்து ஈய கூரைகளும், கலர் கண்ணாடி ஜன்னல்களும், பாதிரியார்களின் தொடர்ச்சியான பிரார்த்தனை சடங்குகளும் மறைய தொடங்கியது.

 

இந்த மடாலயங்கள் பிராத்தனை மையங்களாக இருந்தன, அங்கு பொதுமக்கள் பிரார்த்தனைகளை கேட்க வந்தனர். இங்குள்ள பாதிரியார்கள் காலை பிரார்த்தனை முதல் மாலை பிரார்த்தனை வரை தினமும் எட்டு நேர பிரார்த்தனைகளை அவர்களின் ஆராதனை புத்தகத்திலிருந்து செய்தனர். இந்த சடங்குகள் இங்கிலாந்தின் கிறிஸ்தவ வாழ்க்கையின் முதுகெலும்பாக இருந்தன. அவை மறைந்தால், அவற்றை மாற்ற ஏதோ ஒன்று தேவைப்பட்டது.

 

மடாலயங்கள் மட்டுமல்ல, 1530களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திருநாட்கள் குறைக்கப்பட்டன, புனித பயணங்கள் முடிவுக்கு வந்தன, புனிதர்களின் வழிபாடு நிறுத்தப்பட்டது. இவையனைத்தும் ரோமிலிருந்து ஆங்கில திருச்சபை விலகுவதை பிரதிபலித்தன. கட்டமைப்பு மற்றும் விசுவாசத்தில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் திருச்சபையின் வழிபாட்டிலும் அதாவது அதன் பிரார்த்தனைகள், சடங்குகள், விசுவாச பிரமாணங்களில் (Creeds) பிரதிபலிக்க வேண்டியிருந்தது.

 

இவையனைத்தும் போப்பை தலைவராகக் கொண்ட ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து வந்தவை. போப்பின் நடைமுறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட இங்கிலாந்தில் ஒரு புதிய ஆராதனை முறை அவசியமாக இருந்தது.

 

பெரிய மடாலயங்கள் அமைதியாகிவிட்ட நிலையில், கிரான்மர் தனது பொது ஜெப புஸ்தகத்தை (Book of Common Prayer) எழுதத் தொடங்கினார். 1538ன் குளிர்காலத்தில், கான்டர்பரி பேராயர்களின் (Archbishops of Canterbury) லண்டன் அரண்மனையில் கிரான்மர் தன்னை அழிக்கப்போகும் அன்பின் உழைப்பை தொடங்கினார்.

 

கிரான்மர் பல்வேறு மூலங்களை ஆராய்ந்தார். சேரம் சடங்குகளின் (Sarum Rites) பிரதிகளை படித்தார். இவை 11ஆம் நூற்றாண்டு முதல் இங்கிலாந்தின் கத்தோலிக்க திருச்சபையில் மிகவும் பொதுவான வழிபாட்டு முறைகளின் தொகுப்புகளாகும். அவர் ஜெர்மன் லூதரன் புராட்டஸ்டன்டுகளின் படைப்புகளையும், ஸ்பானிஷ் பிரார்த்தனைகளையும் கூட படித்தார்.

 

வாழ்க்கையின் முக்கிய தருணங்களை விவரிக்க அதாவது பிறப்பு, மரணம், திருமணம், பருவகால மாற்றங்களை உணர்த்த சிறந்த வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் தேடினார். மிக முக்கியமாக, இங்கிலாந்தில் உள்ள சீர்திருத்தவாதிகளின் புதிய நம்பிக்கைகளை வெளிப்படுத்த வார்த்தைகளை தேடினார்.

 

ரோமன் கத்தோலிக்கத்தில் மிகவும் புனிதமான சடங்கான திருப்பலியை குறித்தும் கேள்விகள் எழத்தொடங்கின. அந்த கால கட்டத்தில் அதை கேள்வி கேட்பதே துரோகத்திற்காக அவர்களை எரிக்கப்படும் குற்றமாக இருந்தது. ஹென்றியின் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில், ஆங்கில சீர்திருத்தவாதிகள் திருப்பலியையும், டிரான்சப்ஸ்டான்சியேஷன் கருத்தையும் கேள்வி கேட்கத் தொடங்கினர்.

 

ஆங்கில சீர்திருத்தவாதிகள் அதிர்ச்சியூட்டும் விதமாக திருப்பலியில் கிறிஸ்துவின் உண்மையான பிரசன்னத்தை மறுத்தனர். நற்கருணை வெறும் நினைவுகூரும் சடங்கு மட்டுமே என்று கூறினர். அவர்களின் கருத்துக்கள் மிகவும் சர்ச்சைக்குரியவையாக இருந்ததால், அவர்கள் மரண தண்டனைக்கு ஆளானார்கள்.

 

கிரான்மர் அவர்களின் கைது மற்றும் விசாரணைகளில் இருந்து விலகி நின்றார். ஒருவேளை அவரும் இரகசியமாக அவர்களின் அந்த சீர்திருத்த நம்பிக்கைகளை பகிர்ந்திருக்கலாம் என கருதக்கூடும். இந்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தால் அவரது உயிர் பறிபோயிருக்கும். மேலும் இந்த புதிய யோசனைகளை அடிப்படையாகக் கொண்ட நற்கருணை ஆராதனையை அவர் எழுதியிருக்கலாம் என்றாலும் ஹென்றி உயிருடன் இருந்தவரை, இந்த லட்சியங்களை நிஜமாக்க முடியாத நிலையில் இருந்தார்.

 

பாரம்பரிய ரோம கத்தோலிக்கராக இருந்த ராஜா ஹென்றி, போப்பை நிராகரித்த போதிலும், உண்மையான பிரசன்னத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். லத்தீன் திருப்பலியில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரும் அவரது பழமைவாத பேராயர்களும் (Bishops) தங்களின் மத கருத்துக்களை பகிர்ந்து கொள்ளாதவர்களை கடுமையாக கையாண்டனர்.

 

சீர்திருத்தத்த சிந்தனை வளர்ப்பில் வளர்ந்த முதல் அரசரான எட்வர்ட் 1547ல் ஒன்பது வயதில் முடிசூட்டப்பட்டபோதுதான், தனது சீர்திருத்த லட்சியங்களை நிஜமாக்க கிரான்மருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹென்றி மரித்ததும், அவர் பிடித்து வைத்திருந்த கத்தோலிக்கத்தின் எச்சங்களை கிராமர் கலைத்தார். கிரான்மர் அத்தனை காலமும் காத்திருந்த அந்த சீர்திருத்த புரட்சியை நிஜமாக்கும் தருணம் வந்தது, அவரது ஜெப புத்தகம் அதன் மையத்தில் இருந்தது.

 

ஆறு மாதங்களுக்குள் அனைத்து ரோமன் கத்தோலிக்க ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. இங்கிலாந்தின் தெருக்களில் ஆராதனைகள் பரவலாக நடக்கவில்லை. 1548ல் கிரான்மர் தனது ஜெப புத்தகமானது ஆராதனை புத்தகமாக மாற்றபட வேண்டும் என்று வாதாட தொடங்கினார். ஆனால் இது எளிதாக இல்லை.

 

திருச்சபை பிளவுபட்டிருந்தது - ஒரு பக்கம் பழமைவாதிகள், மறுபக்கம் சீர்திருத்தவாதிகள் (reformers). சர்ச்சைக்குரிய நற்கருணை பிரச்சனை லார்ட்ஸ் சபையில் ஐந்து நாட்கள் உணர்ச்சிகரமாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதங்களின் போதுதான் கிரான்மர் முதன்முறையாக தான் இரகசியமாக வைத்திருந்த நம்பிக்கைகளான திருப்பலியில் உண்மையான பிரசன்னத்தை அவர் நம்பவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

 

பெரும் ஆதரவு இல்லாத போதிலும் கிரான்மர் தனது அதில் வெற்றியும் பெற்றார். ஜெப புஸ்தகத்தை (Book of Common Prayer) இங்கிலாந்தின் ஒவ்வொரு தேவாலயத்திலும் கட்டாயமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

 

ஆனால் கிரான்மரின் மாபெரும் படைப்புக்கான முடிவு கொண்டாட்டம் அல்ல, வன்முறையான எதிர்ப்பு. 1549 ஆரம்ப கோடையில், டிண்டேலின் புதிய ஏற்பாடு எரிக்கப்பட்ட அதே இடத்தில் கிரான்மர் பேராயர் (Archbishop) தனது படைப்பை வெளியிட்டார். ஆலயங்களில் தேவ வார்த்தைகளை மக்கள் தங்கள் சொந்த மொழியில் கேட்க முடிந்தது மேலும் உணர்ந்து ஆராதனையில் பங்கு கொள்ளவும் முடிந்தது.

 

இதுவே கிரான்மருக்கு வெற்றியின் தருணமாக இருந்தது. பல ஆண்டுகள் திட்டமிடல், கடின உழைப்பு, மற்றும் ஜெப புத்தகத்தின் வார்த்தைகளில் உண்மையான இரட்சிப்பிற்கான பாதை உண்டென்ற முழுமையான நம்பிக்கை ஆகியவை கிராமர் பணி நிறைவின் உச்சக்கட்டம்.

 

ஜெப புஸ்தகம் இன்றும் உலகெங்கிலும் உள்ள இங்கிலாந்து திருச்சபை மரபை கொண்ட தேவாலயங்களில் வழிபாட்டின் அடிப்படையாக உள்ளது. அதன் வார்த்தைகள் பிறப்பு, மரணம், திருமணம் ஆகியவற்றை தேவ பிரசன்னத்துடன், வேத தொனியோடு, நமது வாழ்வின் இரத்த ஓட்டத்தின் பகுதியாக நம் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

தனியாக திறமையுடைய, ஆராதனை செய்யும் பாதிரியார்கள் கையில் இருந்த ஜெபம், சித்தாந்தங்கள், மற்றும் வேத கருத்துக்களை மக்கள் அனைவருக்கும் பரவாலாக்கியது. ஜெபமும், ஆராதனையும் தனி ஒருவருக்கு அல்ல அது அனைவருக்கும் உரியது என்று அனைவரிடம் ஆராதனை பங்கெடுப்பை கொண்டு சென்றது.

 

ஜெப புஸ்தகத்தில் கிராமர் ஏற்படுத்திய புதிய நற்கருணை ஆராதனை முறைமை இருந்தது. இனி அது மாயாஜால அற்புதத்தின் தருணமாக அல்லாமல், நினைவுகூரும் ஆராதனையாக ஏற்படுத்தப்பட்டது. ஜெப புத்தகம் ஒரு வேதாகம புரட்சியின் நடைமுறை அறிக்கையாக இருந்தது, ஒவ்வொரு தேவாலயத்திலும் வைக்கப்பட்டது.

 

ஆனால் கிரான்மரின் வாழ்க்கை வெற்றியை தொடர்ந்து, அதன்பின் உடனே வன்முறை கலகத்திற்கு நேரே திரும்பியது. 1549 ஆரம்ப காலத்தில், டெவன் மற்றும் கார்ன்வால் மாவட்டங்களில் பழைய லத்தீன் திருப்பலிக்கு பதிலாக கிரான்மரின் ஜெப புத்தகத்தை கட்டாயமாக அறிமுகப்படுத்தியது பாதிரியார்களின் மற்றும் பழைமைவாதிகளின் கோபத்தை தூண்டியது. இங்கிலாந்தின் வழிபாட்டு முறைக்காக மக்கள் எழுந்து ரத்தம் சிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

1553ல் சீர்திருத்த சிந்தை உடைய சிறுவன் மன்னன் எட்வர்ட் காசநோயால் பாதிக்கப்பட்டார், சில மாதங்களில் மரணமடைந்தார். அவரது சவ அடக்கத்திற்கு முந்தைய இரவு, அவரது உடல் வெஸ்ட்மினிஸ்டர் ஆபிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரைச் சுற்றி அவரது அரசவை சீர்திருத்தவாதிகள் கூடினர், புராட்டஸ்டன்ட் எதிர்காலத்திற்கான தங்கள் கனவுகள் இப்போது ஆபத்தில் இருப்பதை அறிந்தனர்.

 

அரியணை வாரிசு ஹென்றி மற்றும் அவரது முதல் மனைவி கேதரின் ஆஃப் அராகனின் மகளான மேரி. தீவிர ரோமன் கத்தோலிக்கராக, அவள் தன் சகோதரனையும் அவரது ஆலோசகர்களையும் வெறுக்க காரணம் அந்த ஒரு காரணம் போதுமானதாக இருந்தது. அந்த ஆகஸ்ட் இரவில் இளம் மன்னரின் உடலருகே நின்ற பேராயர், மன்னரின் உடலருகே நின்றபடி, தனது நேரம் முடிவடைந்து கொண்டிருப்பதை அறிந்தார்.

 

புதிய ராணியின் தாயாருக்கு விவாகரத்து அளித்து அவரை அவமானப்படுத்தியவர் பேராயர் கிரான்மர். அவள் நேசித்த மதத்தை அழித்தவர், மேரியை சட்டவிரோதமானவள் என அறிவித்தவர். கேதரின் ஆஃப் அராகனின் மகள் பயங்கரமாக பழிவாங்குவாள் என்பதும அவருக்குத் தெரியும்.

 

மேரியின் வருகையுடன் இங்கிலாந்து கடுமையான மாற்றத்திற்கு உள்ளானது. கிரான்மர் கலைக்கத் தொடங்கிய கத்தோலிக்க சடங்குகளை அவள் மீண்டும் கட்டாயமாக அறிமுகப்படுத்தத் தொடங்கினாள். அவளது முடிசூட்டு விழா முடிந்து ஒரு மாதத்திற்குள் லத்தீன் திருப்பலி மீண்டும் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கேட்கத் தொடங்கியது.

 

கிரான்மர் கோபமடைந்தார், இந்த நற்கருணைக்கான அவமதிப்பை கண்டித்து தனது ஆதரவாளர்களுக்கு தனியாக நிருபம் எழுதினார். ஆனால் அவரது கடிதம் கசிந்தது, அவர் தயாராக இருப்பதற்கு முன்பே லண்டன் முழுவதும் பிரதிகள் பரவின. பயங்கரமான சூழ்நிலையை தைரியமாக கையாளும் முயற்சியில், தான் எழுதியதை மறுக்காமல், மேலும் பிரதிகளை வெளியிட்டார். அதில் லத்தீன் திருப்பலியை "சாத்தானின் கண்டுபிடிப்பு" என்று கண்டித்தார், மேலும் வேத ஆதாரத்தோடு இருந்த ஜெப புத்தகத்தை "கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்தையும் விட தூய்மையானது, தேவனின் வார்த்தைக்கு துணையாக நிற்க கூடியது" என்று பாதுகாத்தார்.

 

மேரியின் அரசாங்கத்திற்கு கிரான்மரின் வார்த்தைகள் தேவத்தூஷணமாக இருந்தன. எட்வர்டின் மரணத்திற்கு சில மாதங்களுக்குப் பின் அவர் லண்டன் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின் அவர் இனி தான் சுதந்திர மனிதராக இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தார்.

 

ஆக்ஸ்போர்டில் கிரான்மர் தனது முடிவை எதிர்கொண்டார். தனது சிறை ஜன்னலிலிருந்து, திருப்பலியின் ஊர்வலத்தை பார்க்க நிர்பந்திக்கப்பட்டார். அவர் தடை செய்த சடங்குகளை மேரி மீண்டும் கொண்டு வந்திருந்தார். மார்ச் மாதத்தின் மழை நாள் ஒன்றில் அவர் தனது இறுதி அறிக்கையை வழங்க பல்கலைக்கழக தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

கத்தோலிக்க வழிபாட்டின் ஒலியுடன் வழிநடத்தப்பட்ட கிரான்மர், பார்வையாளர்களுக்கு தோற்றுப்போன மனிதராக தோன்றினார். சீர்திருத்தத்தை முன்னின்று நடத்திய புரட்சியாளர், தனிமை, பெலவீனம், மற்றும் சோகத்தின் சுழலில் சிக்கியிருந்தார்.

 

இந்த பலவீனமான நிலையில், தான் தன் வாழ்நாள் முழுவதும் சாதிக்க உழைத்த அனைத்தையும் மறுதலிக்கும் ஆறு மறுப்புகளில் வலுகட்டாயமாக கையெழுத்திட நிர்பந்திக்கபட்டார். கிரான்மர் பேசுவதற்கு முன், ராணி மேரியால் அனுப்பப்பட்ட ஈட்டனின் தலைவர் ஹென்றி கோல் ஒரு பிரசங்கம் செய்தார். அதில் கிரான்மரின் மரணத்திற்கான காரணங்களை விளக்கினார். மூன்று நாட்களுக்கு முன்பு கிரான்மர் கையெழுத்திட்ட அறிக்கையிலிருந்தே இந்த காரணங்களை படித்தார்.

 

மக்கள் நிறைந்த தேவாலயத்தின் முன், ஏன் அவர் உயிருடன் எரிக்கப்பட வேண்டும் என்று கோல் விளக்கினார். கிராமர் ரோம சபைக்கு எதிராக செய்யப்பட்ட காரியங்கள் மக்கள் மத்தியில் படிக்கப்பட்டன.

 

கோல் அனைத்தையும் படித்து முடித்ததும், பேராயர் பேசத் தொடங்குவார் என காத்திருந்த கூட்டம் சற்று பதற்றத்துடன் இருந்தனர்.

 

கிரான்மர் கூடியிருந்த மக்களிடம் பேச ஆரம்பித்தார். அவரை வலுகட்டாயமாக மன்னிப்பு கூற சொன்னனர். ஆனால் "எல்லாவற்றிலும் மேலாக ஒரு விஷயம் என் மனச்சாட்சியை அதிகமாக வருத்துகிறது, இதைப் பற்றி பின்னர் பேச விரும்புகிறேன்" என்று மறைமுகமாக பேசினார். தொடர்ந்து அவர், "என் இதயத்தில் உண்மைக்கு எதிரானதாக இருந்த, மரண பயத்தால் கையெழுத்திடப்பட்ட அனைத்து காகிதங்களும் தவறானவை. போப்பை நான் கிறிஸ்துவின் எதிரியாக, அந்திகிறிஸ்துவாக, அவரது அனைத்து போலி உபதேசங்களுடன் நிராகரிக்கிறேன். நற்கருணையைப் பொறுத்தவரை, ஜெப புத்தகத்தில் கற்பித்தபடியே நம்புகிறேன்" என்றார்.

 

இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் கிரான்மரை கீழே தள்ளி, மேடையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, விறகு கட்டை நிறைத்து வைத்திருந்த இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். விறகுகள் தீ மூட்டப்பட்டபோது, பேராயர் ஒரு இறுதி எதிர்ப்பு சைகையில் தனது கையை நீட்டினார்.

 

தனது இறுதி மணிநேரங்கள் சீர்திருத்த சிந்தனைக்கான வெற்றி என்று அறிந்திருந்தாலும், அவருடன் அவரது இங்கிலாந்து சீர்திருத்த நம்பிக்கைகள் முடிவடையும் என்று அவர் பயந்திருக்கலாம். அவரது மரணம் ஒரு தொடக்கம் மட்டுமே என்பது அவருக்குத் தெரியாது. அவர் மரித்த லட்சியம் உயிர்பெற்று, ஒரு தசாப்தத்திற்குள் ஒவ்வொரு இங்கிலாந்து திருச்சபை மரபை கொண்ட தேவாலயமும் அவர் அவ்வளவு ஆழமாக நம்பிய வழிபாட்டு முறையின் வார்த்தைகளால் எதிரொலித்தது.

 

அவரது ஜெப புத்தகம் உயிர்வாழ்ந்து, 400 ஆண்டுகளுக்கும் மேலாக கிறித்தவ சீர்திருத்த சிந்தனைகளை விதைத்து வருகிறது.

 

கிரான்மரின் ஜெப புஸ்தகம் (Book of Common Prayer) இன்றும் திருநெல்வேலி (Tinnevelly) திருமண்டலத்தின் (Diocese) ஆவிக்குரிய (Spiritual) வாழ்வின் மையமாக திகழ்கிறது. கத்தோலிக்க எதிர்ப்பின் மத்தியில் உருவான இந்த புத்தகம், இன்று உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக தமிழில் திருநெல்வேலி கிராமங்களின் விசுவாசிகளின் (believers) தினசரி ஆராதனையின் அங்கமாக மாறியுள்ளது.

 

200 ஆண்டுகளுக்கும் மேலாக, பாளையங்கோட்டை (Palamcottah) முதல் திருநெல்வேலியின் கிராமப்புற தேவாலயங்கள் வரை, குருவானவர்கள் (Pastors) முதல் விசுவாசிகள் (believers) வரை, நற்கருணை முதல் திடப்படுத்துதல் (Confirmation) வரை, ஒவ்வொரு ஆவிக்குரிய (Spiritual) அனுபவமும் இந்த ஜெப புஸ்தகத்தின் வார்த்தைகளால் வழிநடத்தப்படுகிறது.

 

இவ்வாறு, மரணத்தின் மத்தியில் பிறந்த ஒரு புத்தகம், இன்று திருநெல்வேலி திருமண்டலத்தின் (Diocese) உயிர்மூச்சாக மாறியுள்ளது. டிண்டேல் மற்றும் கிரான்மர் தங்கள் உயிரை கொடுத்து பாதுகாத்த சத்தியங்கள், இன்று தமிழ் மண்ணில் புதிய வாழ்வு பெற்று, புதிய தலைமுறையினரின் விசுவாசத்தை (Faith) வளர்க்கின்றன. இது வெறும் வரலாற்று மாற்றம் அல்ல, தொடர்ந்து நடைபெறும் ஆவிக்குரிய (Spiritual) புதுப்பிப்பின் சாட்சி.

 

(கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் மாத ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை ஜனவரி 2025)